கோலா லம்பூர், ஜூலை 17:
கொவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், மலேசியா, சட்டவிரோதக் குடியேறிகளை கையாண்ட முறை குறித்து அல் ஜசிரா வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பிலான விசாரணைக்கு உதவும் பொருட்டு சில தரப்பினர் அழைக்கப்படவிருக்கின்றனர்.
அந்த ஆவணப் படத்திற்கு தொடர்புடைய உரையாடல் பதிவு மற்றும் ஆவணங்கள், விசாரணைக்காக சேகரிப்பட்டு வருவதாக, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை, ஜே.எஸ்.ஜே இயக்குநர் டத்தோ உசிர் முஹமட் தெரிவித்திருக்கிறார்.
இதன் தொடர்பாக, ஜே,எஸ்.ஜே-வின் திட்டமிட்ட குற்றப் புலனாய்வுத் துறையின் போலீஸ் அதிகாரிகள் விசாரணைச் செய்வார்கள் என்று டத்தோ உசிர் முஹமட் குறிப்பிட்டார்.இந்த ஆவணப்படத்தை ஒளிப்பரப்பிய தகவல் துறை, ஃபினாஸ், எம்கேஎன், கேகேஎம், டிவி3 ஆகியவற்றின் வாக்குமூலம் பதிவுச் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். நிந்தனை செய்தியை வெளியிட்டதற்காக, 1948-ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டம், செக்ஷன் 4 (1), குற்றவியல் சட்டம், செக்ஷன் 500, மற்றும் தொடர்புச் சேவையைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக, 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், செக்ஷன் 233-ரின் கீழ், இவ்விவகாரம் விசாரணைச் செய்யப்படுகிறது.