ஷா ஆலம், ஜூலை 29:
சிலாங்கூர் மாநில அரண்மனையில் இருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் காலியாக இருக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நியமனங்கள் மற்றும் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெறும் என மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். மாநில அரசாங்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது என்றும் பதவிப் பிரமாணச் சடங்குகள் ஹாஜ் பெருநாளுக்கு பிறகு நடைபெற உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
” நாம் சிலாங்கூர் மாநில அரண்மனையின் அதிகாரப் பூர்வ அறிவிப்புக்கு காத்துக் கொண்டிருக்கிறோம். பதவிப் பிரமாண சடங்குகள் அரண்மனை நிர்வாகம் பொறுப்பு ஆகும். அனைத்து ஏற்பாடுகளும் அரண்மனையே நடத்தும்,” என்று சிலாங்கூர் மாநில நடவடிக்கை அறையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு அமிருடின் ஷாரி கூறினார். சில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் வேலைப்பளு அதிகமாக இருந்ததாலும் மாநில அரசாங்கம் எப்போதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது என நம்பிக்கை தெரிவித்தார்.