ஷா ஆலம், செப் 15- கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுமானத் துறைக்கு மீண்டும் புத்துயிரூட்டப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அடுத்த மூன்று அல்லது ஐந்தாண்டுகளில் மேற்கொள்ளப்படவிருக்கும் 30,000 வீடுகளை உள்ளடக்கிய ரூமா இடாமான் திட்டம் மற்றும் இதர வீடமைப்புத் திட்டங்கள் 1,200 கோடி வெள்ளி மதிப்பிலான பொருளாதார பங்களிப்பை மாநிலத்திற்கு வழங்கும் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு வீடமைப்புத் துறை 10 முதல் 15 விழுக்காடு வரையிலான பங்களிப்பை மட்டும் வழங்கினாலும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அது அளப்பரிய பங்கினை ஆற்றி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
வீடமைப்புத் துறையில் ஏற்படும் மந்த நிலை அது சார்ந்த இதரத் துறைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கட்டுமானப் பொருள்களான சிமெண்ட், செங்கல் போன்றவை மட்டுமின்றி வீட்டுக்குத் தேவையான மின்விசிறி, குளிர்சாதனம், மரத்தளவாடப் பொருள்களின் விற்பனையும் பாதிக்கப்படும் என்றார் அவர்.
இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற சபாக் பெர்ணம், ஆயர் மானிஸ் வீடமைப்புத் திட்டத்திற்கு மறுதோற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ரூமா இடாமான் திட்டத்தை மேற்கொள்வதன் வழி பி40 மற்றும் எம்50 பிரிவினர் எதிர் நோக்கும் வீட்டுடமைப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்பதோடு பொருளாதாரத்திற்கு உத்வேகத்தையும் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்த முடியும் என்று அமிருடின் சொன்னார்.