கட்டண பாக்கி காரணமாக டி ஏரா குடியிருப்பில் நீர் விநியோகம் துண்டிப்பு- பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ குணராஜ் நடவடிக்கை

கிள்ளான், நவ 28- ஒன்பது லட்சம் வெள்ளி குடிநீர் கட்டண பாக்கி செலுத்தப்படாத காரணத்தால் கம்போங் ஜாவா, டி ஏரா அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த நான்கு நாட்களாக நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு வசிக்கும் 315 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பில் புகார் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் குணராஜ் குடியிருப்பாளர்கள் மற்றும் ஷா ஆலம் மாநகர் மன்றத்தால் நியமிக்கப்பட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்தினார். இது தவிர, ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் அதிகாரிகளுடனும் அவர் பேச்சு நடத்தினார்.

இவ்விவகாரத்திற்கு தற்காலிக அடிப்படையில் தீர்வு காண்பதற்கு ஏதுவாக கால அவகாசம் வழங்கிய ஆயர் சிலாங்கூர் நிறுவனத்திற்கு தாம் நன்றி தெரிவித்து கொள்வதாக குணராஜ் கூறினார்.

இந்த கட்டண பாக்கி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :