SELANGORYB ACTIVITIES

இஸ்லாம் அல்லாதோர் விவகார செயற்குழுவிற்கு மேலும் பத்து லட்சம் வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், டிச 22- இஸ்லாம் அல்லாதோர் விவகாரங்களுக்கான செயற்குழு சிலாங்கூர் மாநில பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தோ சமயங்களுக்கான சிறப்பு குழு (லீமாஸ்) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் நல்லிணக்கமும் சுபிட்சமும் நீடிப்பதற்கு அந்த சமய அமைப்புகள் வழங்கி வரும் உதவிகள் மற்றும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த பெயர் மாற்றத்தை செய்ய மாநில ஆட்சிக்குழு முடிவு செய்துள்ளதாக ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
இந்த சமய அமைப்புகளின் வளர்ச்சிக்காக அடுத்தாண்டில் மேலும் பத்து லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டை சிலாங்கூர் அரசு வழங்கவுள்ளதாக அவர் சொன்னார்.
பௌத்த, தோ, இந்து, சீக்கிய, கிறிஸ்துவ மற்றும் கத்தோலிக்க சமயங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 60 லட்சம் வெள்ளியுடன் மேலும் பத்து லட்சம் வெள்ளி கூடுதலாக அடுத்தாண்டில் வழங்கப்படவுள்ளது என்றார் அவர்.
மாநில அளவிலான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி நடைபெற்ற நிதியுதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :