SELANGORYB ACTIVITIES

குழாய் உடைப்பு- போக்குரத்து நெரிசலைத் தவிர்க்க பத்து ஆராங் பி27 மாற்றுச் சாலை திறக்கப்பட்டது

ஷா ஆலம், ஜன 3– ரவாங், பத்து ஆராங் பி27 சாலை மூடப்பட்டதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தற்காலிக மாற்றுச் சாலை திறக்கப்பட்டுள்ளது.

இரு வாரங்களுக்கு முன்னர் பெட்ரோனாஸ் எண்ணெய் நிலையம் முன் உடைந்த  நிலத்தடி நீர்க் குழாயை சரி செய்யும் பணியில் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.

சம்பந்தப்பட்ட இடத்தில் குழாய் உடைப்பை சரி செய்து சாலையை சீரமைக்கும் முயற்சியில் ஆயர் சிலாங்கூர் நிறுவனமும் பொதுப்பணித்துறையும் கடந்த இரு வாரங்களாக முயன்று வருகின்றன. எனினும்,  நீர்க் கசிவை இதுவரை நிறுத்த முடியவில்லை என்றார் அவர்.

தாமும் செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் ஜீ கீனும் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வருகை மேற்கொண்டு நிலைமையை நேரில் கண்டறிந்ததோடு பழுதுபார்ப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்டத் தரப்பினரை கேட்டுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குழாய் உடைப்பை சரி செய்து சாலையை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட பின்னரே பத்து ஆராங் சாலையை திறக்க முடியும் என்பதால் தற்காலிக அடிப்படையில் மாற்றுச் சாலையை திறக்கும்படி பொதுப்பணித்துறை பணிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

சம்பந்தப்பட்ட இடத்தை கடக்கும்போது மிகுந்த கவனப் போக்கை கடைபிடிக்கும்படி வாகனமோட்டிகளை அவர் கேட்டுக் கொண்டார். போக்குவரத்தை கண்காணிக்கும் பணியில் ஆயர் சிலாங்கூர் மற்றும் பொதுப்பணித்துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 


Pengarang :