ஷா ஆலம், ஜன 4– இந்நாட்டில் இனங்களுக்கிடையே பிளவையும் மோதல்களையும் ஏற்படுத்தும் தரப்பினரை நிராகரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். அத்தரப்பினரின் நடவடிக்கை நாட்டின் தேசிய கோட்பாட்டை சிதைத்து விடும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஒற்றுமைதான் இப்போதைக்கு எனது தலையாய சிந்தனையாக உள்ளது. மக்கள் ஏழைகளாகவும் நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்தும் இருக்கும் தருணம் இன மற்றும் மத உணவுர்களை பற்ற வைப்பதற்கான வாய்ப்பாக மாற்றப்படுகிறது என்றும் அவர் எச்சரித்தார்.
இப்போது பிற இனங்கள், சிறுபான்மையினர் மற்றும் வந்தேறிகள் சார்ந்த இனவாத அத்தியாயம் தொடங்கி விட்டது. இது தேசத்திற்கு பாதிப்பு தரக்கூடியது என்பதோடு நாட்டின் பலவீனமான அரசாங்கத்தினால் இந்நிலை உண்டானது என்று கெஅடிலான் தலைவருடன் 2021ஆம் ஆண்டின் ஒரு மாலை எனும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.
ஏழைகள், பின்தங்கியவர்கள், சபா மற்றும் சரவா மாநிலங்களின் புறநகர்ப்பகுதிகளில் வசிப்பவர்கள் நலன் மீது நாட்டின் அரசியல்வாதிகள் அக்கறையும் கடப்பாடும் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஆகவே, நாம் உயரிய நிலைப்பாட்டைக் கொண்டவர்களாகவும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பவர்களாகவும் இருக்கும் பட்சத்தில் எத்தகைய தாக்குதலுக்கும் அஞ்சி பின்வாங்க மாட்டோம் என்றார் அவர்.