கோத்தா பாரு, ஜன 10- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) அமலாக்கம் தொடர்பில் உறுதிபடுத்தப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் என பொதுமக்களை பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமூக ஊடகங்கள் வழி பரப்பப்பட்டு வரும் இத்தகைய தகவல்கள் காரணமாக பீதியில் பொருள்களை வாங்குவது உள்பட தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட வழி வகுக்கும் என்று அவர் சொன்னார்.
போலீசார் சாலைத் தடுப்புகளை ஏற்படுத்தி பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேறுவதை தடுத்து விடுவார்கள் என சமூக ஊடகங்கள் வழி வெளியிடப்படும் வதந்திகளை நம்பாதீர்கள். உண்மையில் இது போன்றச் சம்பவங்கள் நிகழ்வேயில்லை என்று அவர் கூறினார்.
இதன் தொடர்பில் நாளை அறிவிப்பு வெளியிடப்படும். அதன் பின்னரே உண்மையான நிலவரம் என்பது நமக்கு தெரியவரும். அறிவிப்பு வருமுன்னரே குழப்பம் அடைந்து பேரங்காடிகளை முற்றுகையிட வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.
இங்குள்ள பிரிகேட் 8 முகாமில் வெள்ள அகதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் விஷயத்தில் மக்களின் சுகாதாரம் மற்றம் அன்றாட பொருளாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட அம்சங்களை அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் என்றும் அவர் சொன்னார்.