கோலாலம்பூர், ஜன 23– கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசித் திட்டம், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதிலும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வதிலும் முக்கிய பங்கினை ஆற்றக்கூடியதாக விளங்குகிறது.
நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட சமுதாயத்தை உருவாக்கி விடும் பட்சத்தில் மக்கள் மத்தியில் நோய்க் கிருமிகளை எதிர்கொள்ளும் ஆற்றல் அதிகரித்து அதன் மூலம் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்று அறிவியில், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் அமைச்சின் தொழில்நுட்ப மேம்பாடு, வர்த்தகப் பிரிவுக்கான துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் முகமது நோர் அஸ்மான் கூறினார்.
நோய்க் கிருமிகளை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் பட்சத்தில் ஏறக்குறைய வழக்கமான சூழலில் நாம் செயல்படுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று அவர் சொன்னார்.
நாட்டிலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் பட்சத்தில் பொருளாதாரம் மீண்டும் துடிப்புடன் செயல்படுவதற்குரிய வாய்ப்பு பிரகாசமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெர்னாமா தொலைக்காட்சியில் ‘கோவிட்-19- தடுப்பூசியின் முக்கியத்துவமும் நோய் எதிர்ப்பு சக்தியும்‘ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அடுத்தாண்டு முதல் காலாண்டில் சுமார் 2 கோடியே 70 லட்சம் பேர் அல்லது 80 விழுக்காட்டு மலேசியர்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றிருப்பர் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகின் யாசின் அண்மையில் கூறியிருந்தார்.
பெர்மாய் எனப்படும் மலேசியர்களுக்கான சிறப்பு பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவித் திட்டத்தை அறிவித்த போது பிரதமர் இந்த தகவலை வெளியிட்டார்.
இந்த தடுப்பூசி முதல் கட்டமாக வரும் பிப்ரவரி மாதம் தருவிக்கப்படும் என்றும் மார்ச் மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு 12 மாதங்களுக்கு கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.