NATIONAL

சிலாங்கூரில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மார்ச் 31 வரை நீட்டிப்பு

ஷா ஆலம், மார்ச் 17– சிலாங்கூர் மாநிலத்தில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் வெள்ளியன்று அமலுக்கு வருகிறது.

பினாங்கு, கோலாலம்பூர், ஜோகூர், கிளந்தான் ஆகிய மாநிலங்களிலும் இந்த ஆணை இதே காலக்கட்டத்திற்கு நீட்டிக்கப்படுவதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

சரவா மாநிலத்தில் இந்த கட்டுப்பாட்டு ஆணை இன்று தொடங்கி வரும் 29 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அவர் சொன்னார்.

கெடா, நெகிரி செம்பிலான், பேராக் ஆகிய மாநிலங்களில் தற்போது அமலில் இருக்கும் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையாக மாற்றப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கம் தொடர்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எனினும், மாநில எல்லைகளைக் கடப்பதற்கு இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள மாநிலங்களுக்கு சுற்றுலா நோக்கத்திற்காக பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

சபா மற்றும் சரவா தவிர்த்து இதர மாநிலங்களில் மாவட்ட எல்லைகளைக் கடப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.


Pengarang :