HEALTHNATIONAL

அஸ்ட்ராஸேனேகா தடுப்புசிக்கான முன்பதிவு  3 மணி 20 நிமிடங்களில் முடிந்தது.

கோலாலம்பூர், மே 3- அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிக்கான முன்பதிவு  மூன்று மணி 20 நிமிடங்களில் முழுமையாக முடிந்தது. அந்த தடுப்பூசியைப் பெற விரும்பும் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர்வாசிகளுக்காக  ஞாயிற்றுக் கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அந்த தடுப்பூசி இயக்கத்தின் முன்பதிவு தொடங்கியது. 

எனினும், குறுகிய நேரத்தில் அந்த தடுப்பூசியைப் பெறுவதற்கு பொதுமக்கள் விரைந்து பதிவு செய்து கொண்டனர்.

இந்த தடுப்பூசிக்கான முன்பதிவு நடவடிக்கை தொடர்பான தகவல்களை தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

இத்திட்டத்தின் கீழ் தடுப்பூசியைப் பெறுவதற்கு பதிவு செய்து கொண்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் தேதி மற்றும் இடம் குறித்த தகவல்கள் மை செஜாத்ரா செயலி மற்றும் குறுந்தகவல் வாயிலாக தெரிவிக்கப்படும் என்றார் அவர்.

இந்த முன்பதிவு நடவடிக்கையில் இடம் பெறாதவர்கள் தங்கள் பெயரை  தொடர்ந்து  http://vaksincovid.gov.my  எனும் அகப்பக்கத்தின் வாயிலாக காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தடுப்பூசியைச் செலுத்தும் நடவடிக்கை  வரும் மே மாதம் 5ஆம் தேதி மலாயா பல்கலைக்கழகம், மலேசிய தேசிய பல்கலைக்கழகம், புத்ரா உலக வாணிக மையம், ஷா ஆலம் ஐ.டி.சி.சி மாநாட்டு மையம் ஆகிய இடங்களில் உள்ள தடுப்பூசி செலுத்தும் மையங்களில் நடைபெறும் என்று அவர் சொன்னார்.

தடுப்பூசி பெறுவதற்கான நேரம் மற்றும் இடத்தை மேற்கண்ட அகப்பக்கம் வாயிலாக  பதிவு  செய்தப் பின்னர் மைசெஜாத்ரா செயலி மற்றும் குறுந்தகவல் மூலம் நீங்கள் தகவல் பெறுவீர்கள். இதுதான் அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசியைப் பெறுவதற்கான வழிமுறையாகும் என்றார் அவர்..

முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 268,000 பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :