அம்பாங், மே 12– மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிலாங்கூரில் வரும் ஜூன் மாதம் முதல் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கும் என்று சுகாதார துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
நோன்பு பெருநாளின் போது எஸ்.ஒ.பி. விதிமுறைகளை கடைபிடிப்பதில் பொதுமக்கள் அலட்சியம் காட்டாவிட்டால் நோய்த் தொற்றைக் குறைக்கும் திட்டத்தை சாத்தியமாக்க முடியும் என்று அவர் சொன்னார்.
நாம் முறையாக எஸ்.ஒ.பி. விதிமுறைகளைக் கடைபிடித்தால் அதன் பலனை நோன்பு பெருநாள் முடிந்து இருவாரங்களில் காண முடியும். இதன் அடிப்படையில் ஜூன் மாதவாக்கில் நோய்த் தொற்று குறைவதற்கான வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடப்பதற்கும் நோன்பு பெருநாளின் போது உறவினர்கள் வீடுகளுக்குச் செல்வதற்கும் விதிக்கப்பட்ட தடை காரணமாக பெருநாள் காலத்தில் ஜனநெரிசல் காணப்படாது என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்களின் பாதுகாப்பு மற்றும் சுபிட்சத்தை கருதியே நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.