கோலாலம்பூர், மே 25- கிளானா ஜெயா தடத்தின் எல்.ஆர்.டி. கே.எல்.சி.சி. நிலையம் அருகே நேற்று நிகழ்ந்த இலகு ரக ரயில் விபத்து தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக போக்குவரத்து அமைச்சு சிறப்பு குழு ஒன்றை அமைக்கும்.
இவ்விபத்து தொடர்பான பூர்வாங்க விசாரணை அறிக்கை தரைப் போக்குவரத்து அமைப்பின் தலைமை இயக்குநரிடமிருந்து இன்று தமக்கு கிடைக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறினார்.
அந்த சிறப்பு விசாரணைக்குழு இரு வார காலத்தில் விசாரணையை முடித்து அதன் தொடர்பான அறிக்கையை அமைச்சிடம் ஒப்படைக்கும் என்று அவர் சொன்னார்.
இந்த விபத்துக்கு சமிக்ஞையில் ஏற்பட்ட பிரச்னை காரணமா? மனித தவறு அல்லது தொடர்பு முறையில் ஏற்பட்ட தவறு காரணமா என்பது இந்த விசாரணையில் கண்டறியப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விசாரணைக்குழுவில் போக்குவரத்து அமைச்சு, பிராசாரானா மற்றும் தரைப் போக்குவரத்து அமைப்பின் உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் இலகு ரக ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்ட 23 ஆண்டுகளில் நிகழ்ந்த முதல் மோசமான விபத்து இது என்பதோடு இந்த விபத்து எல்.ஆ.டி. சேவையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
பயணிகளை ஏற்றிய இரயில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த வேளையில் பயணிகள் இல்லாத இரயில் மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துள்ளது என்றார் அவர்.