ஷா ஆலம், ஜூலை 31- நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படாமல் அவசர காலச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து மாட்சிமை தங்கிய பேரரசர் தனது அதிருப்தியை வெளியிட்டதைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து டான்ஸ்ரீ மொகிடின் யாசின் விலக வேண்டும் என்று சிலாங்கூர் எதிர்க்கட்சித் தலைவர் ரிஸாம் இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.
மாமன்னரின் உத்தரவை மொகிடின் தலைமைத்துவம் வேண்டுமென்றே புறக்கணித்துள்ளதோடு மீறியும் உள்ளதாக அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 150(3) பிரிவுக்கேற்ப வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஏதுவாக அனைத்து அவசரகாலச் சட்டங்களையும் ரத்து செய்வது தொடர்பான பரிந்துரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று மாமன்னர் தெளிவாக கூறியுள்ளதையும் ரிஸாம் சுட்டிக் காட்டினார்.
மாட்சிமை தங்கிய பேரரசருக்கு விசுவாசமாக இருப்பதற்கும் அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து நடப்பதற்கும் பதவியேற்கும் போது செய்து கொண்ட உறுதி மொழியை பிரதமர் மீறி விட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்விவகாரத்தில் தேசிய அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாட்டிற்கேற்ப சிலாங்கூர் மாநில எதிர்க்கட்சியினரின் நிலைப்பாடும் அமைந்துள்ளதாக மாநில அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவருமான அவர் மேலும் சொன்னார்.