Dibashini a/p Dekathiresan, 17, gembira setelah menerima sim kad percuma di Pusat Khidmat ADUN Balakong Taman Kasturi, Kajang pada 26 Oktober 2021. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI

இலவச இணைய தரவு சேவை- மாணவி தீபாஷினி மகிழ்ச்சி 

காஜாங், அக் 27- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக மற்ற மாணவர்களைப் போலவே எஸ்.பி.எம். மாணவியான டி, தீபாஷினியும் இயங்கலை வாயிலாக வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்.

எனினும், தனது இரு உடன்பிறப்புகளுடன் இணைய சேவையை பகிர்ந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் காரணமாக நான்கு வெள்ளி மதிப்பிலான இணைய  தரவு கோட்டா இரு தினங்களிலே தீர்ந்து விடுவதால் கல்வியைத் தொடர்வதில் அவர் சிரமத்தை எதிர் நோக்கினார்.

இணைய தரவு சேவை இல்லாத காரணத்தால் பல சமயங்களில் இயங்கலை வாயிலாக நடத்தப்படும் வகுப்புகளை தாம் புறக்கணிக்க நேர்ந்ததாக செராஸ் ஜெயா இடைநிலைப் பள்ளி மாணவியான அவர் சொன்னார்.

எனினும், சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டிலான இந்த இலவச இணைய தரவு சேவைக்கான சிம் கார்டுகள் வழங்கப்பட்டது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது என்று மூவர்  கொண்ட குடும்பத்தில் மூத்தவரான தீபாஷினி கூறினார்.

பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியு கீ சேவை மையத்தில் இதற்கான விண்ணப்பதை செய்திருந்தேன். மாதம் ஒன்றுக்கு 15 கிகாபைட் இணைய தரவு சேவையை வழங்கக்கூடிய சிம் கார்டுகள் எனக்கு கிடைத்தது உண்மையில் மகிழ்ச்சியைத் தருகிறது என்றார் அவர்.

அடுத்தாண்டில் எஸ்.பி.எம். தேர்வு எழுதவுள்ள நிலையில் இந்த உதவி எனக்கு கிடைத்தமைக்காக அனைத்து தரப்பினருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தீபாஷினி சொன்னார்.

இதனிடையே, தீபாஷினி உள்பட தனது இரு பிள்ளைகளுக்கு இந்த இணைய தரவு சேவையை ஏற்படுத்தித் தந்த சிலாங்கூர் மாநில அரசுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவரின் தாயாரான திருமதி பி. குமுதா (வது 38) கூறினார்.

இந்த இணைய தரவு சேவை தனது இரு பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரியும் என நம்புவதாக செராஸ் பிரிமாவைச் சேர்ந்த அவர் தெரிவித்தார்.

பலாக்கோங் தொகுதி சேவை மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த 46 பேருக்கு இந்த இணைய தரவு சேவைக்கான சிம் கார்டுகள் வழங்கப்பட்டன.


Pengarang :