ஷா ஆலம், நவ 17- கோல சிலாங்கூர் கம்போங் குலாங்-குலாங்கில் உள்ள சாலை எண்பதாயிரம் வெள்ளி செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது.
மார்ரிஸ் எனப்படும் மலேசிய சாலை தகவல் பதிவு முறையின் கீழ் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடின் கூறினார்.
மோசமான நிலையில் காணப்பட்ட அந்த சாலையைப் பயன்படுத்துவோருக்கு ஆபத்து ஏற்படும் சாத்தியம் உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறியதைத் தொடர்ந்து அதனைப் பழுதுபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சுமார் 820 மீட்டர் நீளம் கொண்ட இச்சாலையை சீரமைக்கும் பணி கடந்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கப்பட்டு இம்மாதம 15ஆம் தேதி முற்றுப் பெற்றது என்று சிலாங்கூர் கினியிடம் அவர் சொன்னார்.
இந்த சாலையை பொதுமக்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதோடு கனரக வாகனங்கள் இதனை பயன்படுத்தாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.