ஷா ஆலம், நவ 19- திடக்கழிவை அகற்றும் சேவையை பொது மக்கள் இணையம் வாயிலாக எளிய முறையில் பெறுவதற்கு ஏதுவாக ஐகிளீன் செயலி பெரிதும் துணை புரிகிறது.
குப்பைகளை அகற்றுவது மற்றும் அதன் தொடர்பான புகார்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்த நடவடிக்கை துணை புரிகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
தங்கள் பகுதியில் நிலவும் குப்பைகள் தொடர்பான பிரச்சனைகளை பொது மக்கள் முன்வைப்பதற்கு ஏதுவாக இலக்கவியல் திட்டத்தின் கீழ் இந்த செயலி உருவாக்கப் பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
பொது மக்கள் தங்கள் விரல் நுனியைப் பயன்படுத்துவதன் மூலம் குப்பை அகற்றும் சேவையை இலவசமாக பெறவும் புகார்களைத் தெரிவிக்கவும் முடியும் என அவர் சொன்னார்.
இத்திட்டம் மக்களுக்கு மனநிறைவை அளிக்கும் அதேவேளையில் சமூகத்தின் சுத்தம் மற்றும் சுபிட்சத்தை தரம் உயர்த்தும் என்றார் அவர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த ஐகிளீன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் எம்.பி.ஐ.எனப்படும் மந்திரி புசார் கழகமும் கே.டி.இ.டபள்யு. வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமும் மாநிலத்தில் குப்பை அகற்றும் பணியை திம்பட நிர்வகித்து வருகின்றன.