ஷா ஆலம், டிச 13- சிலாங்கூர் அரசின் பள்ளி உபகரண உதவித் திட்டத்தின் வாயிலாக 44,484 தாவாஸ் அறவாரிய உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கான உதவித் திட்டத்தின் கீழ் பள்ளி பை, எழுது பொருள்கள், உணவுக் கலம், குடிநீர் போத்தல், முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி ஆகியவை வழங்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த உதவி மாணவர்களுக்கு பெரும் பயனாக உள்ளதோடு அடுத்தாண்டில் பள்ளித் தவணை தொடங்கும் போது பெற்றோர்களுக்கு ஏற்படும் நிதிச் சுமையையும் ஒரளவு குறைக்க முடியும் என்று அவர் சொன்னார்.
யாவாஸ் எனப்படும் சிலாங்கூர் பாரம்பரிய மைந்தர் அறவாரியத்தால் நிர்வகிக்கப்படும் இந்த தாவாஸ் அமைப்பு கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் சிலாங்கூரில் பிறந்த குழந்தைகள் இத்திட்டத்தில் சேர முடியும். மூன்று வயதுக்குள் இத்திட்டத்தில் பதிந்து கொள்ளும் குழந்தைகளுக்கு 18 வயதாகும் போது 1,500 வெள்ளி வழங்கப்படும்.