கிள்ளான், ஜூலை 17- தங்களுக்கு பிடித்தமான பொருள்களுக்கு உரிமையாளராகும் 100 சிறார்களின் கனவை நனவாக்கியுள்ளது செந்தோசா சட்டமன்றத் தொகுதி.
கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக தங்களின் விருப்பப் பொருள்களைப் பெறுவதற்கு நீண்ட நாட்கள் காத்திருந்த அவர்கள் நேற்று இங்குள்ள செந்தோசா தொகுதி சேவை மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் தங்களுக்குரிய பொருள்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.
கொன்சன்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட “கிட்ஸ் விஷ்லிஸ்ட் காம் த்ரூ“ என்ற திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 100 சிறார்களுக்கு வெ. 50.00 முதல் வெ. 100.00 வரையிலான விருப்பப் பொருகள் வழங்கப்பட்டன என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
ஐந்து முதல் 12 வயது வரையிலான அச்சிறார்களுக்கு சைக்கிள், சறுக்கு சக்கர பலகை, விளையாட்டு காலணி, விளையாட்டு சாதனங்கள், மற்றும் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன என்று அவர் சொன்னார்.
பெருந்தொற்று காலத்தில் வீட்டில் வெறுமனே பொழுதுதைக் கழிக்கும் கட்டாயத்தில் இருந்த பி40 தரப்பினரின் பிள்ளைகளின் நிலையை உணர்ந்து இத்திட்டத்தை அமல்படுத்தும் முடிவை கடந்த மார்ச் மாதம் தாங்கள் எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இத்திட்டம் சற்று தாமதமடைந்தாலும் அச்சிறார்களை மகிழ்ச்சிப் படுத்துவதற்குரிய சூழலை உருவாக்கும் கனவு நனவானது என்று தொகுதி சேவை மையத்தில் நேற்று செய்தியாளர்ளிடம் அவர் கூறினார்.
இதனிடையே, இத்திட்டம் குறித்து விவரித்த கொன்சென்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீநாத் வேணுகோபாலன், நிறுவன சமூகக் கடப்பாட்டின் அடிப்படையில் இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு தங்கள் நிறுவனத்தின் 4,500 பணியாளர்களும் தங்கள் சொந்த பணம் மற்றும் முயற்சியில் இப்பொருள்களை திரட்டியதாக குறிப்பிட்டார்.
பெரும்பாலும் அந்நிய நாட்டினராக உள்ள எங்கள் தொழிலாளர்கள் ஒரே வார காலத்தில் குழுவாக பிரிந்து இப்பொருள்களை திரட்டும் பணியில் ஈடுபட்டனர் என்றார் அவர்.