HEALTHNATIONAL

15.9 விழுக்காட்டு சிறார்களுக்குக் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது 

கோலாலம்பூர், பிப் 22– நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 15.9 விழுக்காட்டினர் அல்லது 564,220 பேர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

“பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று வரை இத்தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாகச் சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

மேலும், நாட்டில் நேற்று வரை 1 கோடியே 40 லட்சத்து 78 ஆயிரத்து 456 பேர் அல்லது 59.8 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்.

அதோடு 2 கோடியே 29 லட்சத்து 45 ஆயிரத்து 40 பெரியவர்கள் அல்லது 97.5 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் 2 கோடியே 32 லட்சத்து 22 ஆயிரத்து 810 பேர் அல்லது 98.7 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.

இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 99 ஆயிரத்து 132 பேர் அல்லது 90 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 28 லட்சத்து 86 ஆயிரத்து 655 பேர் அல்லது 92.8 விழுக்காட்டினருக்குக் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று 137,307 பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதில் 52,804 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 1,024 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 83,479 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

இதன் மூலம் பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 62 லட்சத்து 89 ஆயிரத்து 382 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 42 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டதாகச் சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.

 


Pengarang :