ஷா ஆலம், மே 26- வெள்ளத்தில் சிக்கிய கியாட் மாரா மாணவர் மின்ராத் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்தார். இச்சம்பவம் சிகிஞ்சானில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் நிகழ்ந்த து.
அந்த 19 வயது மாணவர் வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் புனலை கையில் வைத்திருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமீஸ் கூறினார்.
மின் தாக்குதல் காரணமாக அம்மாணவர் மயங்கிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறிய அவர், இச்சம்பவம் நிகழ்ந்த போது அப்பகுதியில் 0.5 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் சூழ்ந்திருந்ததாகச் சொன்னார்.
சம்பந்தப்பட்ட அந்த மாணவர் உடனடியாக தஞ்சோங் காராங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் அனைத்து மின் சாதனங்களையும் மூடும்படி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
நேற்று காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பெய்த அடை மழை காரணமாக சிலாங்கூர் மாநிலத்தின் வட பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது.
குறிப்பாக சிகிஞ்சானில் ஆயிரக்கணக்கான வீடுகளோடு பொது மண்டபம் மற்றும் ஒரு போலீஸ் நிலையம் ஆகியவையும் வெள்ளத்தில் சுமார் அரை மீட்டர் வெள்ளத்தில் மூழ்கின.