ஜோகூர் பாரு, ஜூலை 10- இம்மாதம் 4 ஆம் தேதி இங்குள்ள கம்போங் பாக்கார் பத்துவில் தன் மனைவி மற்றும் மூன்று மாதக் கைக்குழந்தையை ஆடவர் ஒருவர் படுகொலை செய்தது தொடர்பில் 11 சாட்சிகளிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இந்த இரட்டைப் படுகொலை தொடர்பான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதோடு விசாரணை அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் தமது தரப்பு ஈடுபட்டு வருவதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமாருள் ஸமான் மாமாட் கூறினார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பான ஆகக் கடைசி நிலவரங்களை அறிந்து கொள்ள பலர் ஆர்வம் காட்டுகின்றனர். இச்சம்பவத்தை நேரில் கண்ட மற்றும் அப்பகுதியில் இருந்த 11 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
இங்குள்ள ஜாலான் தெப்ராவில் நேற்று ஓப்ஸ் லஞ்சார் சாலை பாதுகாப்பு இயக்கத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கைதான 24 வயது ஆடவர் விசாரணையில் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாகக் கூறிய அவர், இவ்விவகாரம் தொடர்பில் ஆருடங்களை வெளிடுவதை தவிர்க்கும் அதே வேளையில் போலீசாரின் விசாரணைக்கு வழிவிடும்படி பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
தனது 26 வயது மனைவியையும் மூன்று மாதக் கைக்குழந்தையையும் படுகொலை செய்ததாக நம்பப்படும் அந்த ஆடவரை போலீசார் பெர்மாஸ் ஜெயாவில் கைது செய்தனர்.
கொலை நிகழ்ந்த சில மணி நேரத்திற்குப் பின்னர் நிர்வாணக் கோலத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது அவர் பிடிபட்டார்.