HEALTHPBT

தூய்மையற்ற உணவகங்களுக்கு எதிராக எம்.பி.எஸ்.ஜே. நடவடிக்கை- 10 குற்றப்பதிவுகள் வெளியீடு

ஷா ஆலம், ஜூலை 10- உணவுகளைக் கையாள்வது சம்பந்தப்பட்ட விதிகளை மீறியதற்காக யுஎஸ்ஜே 10, தைப்பான் வர்த்தக மையத்திலுள்ள உணவகங்களுக்கு 10 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன.

உணவகப் பணியாளர்களுக்கு டைபாய்டு காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்தாதது உள்ளிட்ட குற்றங்களுக்காக அவ்வுணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்று சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் (எம்.பி.எஸ்.ஜே.) வர்த்த்க மற்றும் வியூக மேலாண்மைத் துறையின் துணை இயக்குநர் அஸ்பரிசஸால் அப்துல் ரஷிட் கூறினார்.

சில உணவகங்கள் தூய்மையின்றியும் உணவு மூலப் பொருள்கள், சமையல் உபகரணங்கள் மற்றும் சாப்பாட்டு தட்டுகளை தரையிலும் வைத்திருந்தது இச்சோதனையில் கண்டறியப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இம்மாதம் 5ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் யுஎஸ்ஜே 10, தைப்பான் வர்த்தக மையத்திலுள்ள மொத்தம் 51 உணவகங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தாத குற்றத்திற்காக நான்கு குற்றப்பதிவுகளும் தூய்மையைப் பராமரிக்காதது தொடர்பான குற்றங்களுக்காக ஐந்து குற்றப்பதிவுகளும் உணவு மூலப்பொருள்கள் மற்றும் சமையல் உபகரணங்களை தரையில் வைத்திருந்ததற்காக ஒரு குற்றப்பதிவு வெளியிட்டப்பட்டது அவர் சொன்னார்.

பொது மக்களின் பாதுகாப்பும் சுகாதாரமும் தொடர்ந்து பேணப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இத்தகைய சோதனை நடவடிக்கைகளை மாநகர் மன்றம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :