அம்பாங் ஜெயா, ஆக 27- வரும் ஆகஸ்டு 30 ஆம் தேதி இரவு நடைபெறும் சுதந்திர தின வரவேற்பு நிகழ்வில் மாநில மக்களுக்கு ஒர் நற்செய்தியை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவிக்கவிருக்கிறார்.
பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக சில புதிய திட்டங்களை தாம் அன்றைய தினம் அறிவிக்கவுள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மக்களின் சுபிட்சமான வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய பல திட்டங்களை அறிவிக்கவுள்ளதோடு அவற்றை அமல்படுத்தவும் உள்ளோம். மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி வரும் நடப்பு பணவீக்கம் மற்றும் பொருளாதார சவால்களை சமாளிப்பதற்காக இந்நடவடிக்கையை மேற்கொள்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்குள்ள மெலாவத்தி மால் வளாகத்தில் நடைபெற்ற கோம்பாக் மாவட்ட நிலையிலான தேசிய இளைஞர் தின நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அறிவிக்கப்படவுள்ள அந்த உதவித் திட்டங்கள் யாவை என சிலாங்கூர் கினி நிருபர் கேள்வியெழுப்பிய போது, ஆகஸ்டு 30 ஆம் தேதி இரவு அனைத்து விபரங்களும் வெளியிடப்படும் என அவர் பதிலளித்தார்.
சிலாங்கூர் மாநில நிலையிலான 65வது சுதந்திர கொண்டாட்ட நிகழ்வு வரும் ஆகஸ்டு 30 ஆம் தேதி இரவு 8.00 மணிக்கு ஷா ஆலம், சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.