கோலாலம்பூர், அக் 19– நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ள பாலஸ்தீன ஆடவரின் கடத்தல் வழக்கு தொடர்பில் ஆருடங்களை வெளியிட வேண்டாம் என பொதுமக்களை காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இத்தகைய ஆருடங்கள் விசாரணைக்கு இடையூறையும் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தும் என்று தேசிய போலீஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதோடு வரும் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறவுள்ள இவ்வழக்கின் மறுவிசாரணைக்காகவும் அது காத்திருக்கிறது என்று நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.
பாலஸ்தீன ஆடவர் ஒருவரை கடத்தியது தொடர்பில் ஒரு பெண் உள்பட 11 பேர் மீது கடந்த வெள்ளிக்கிழமை இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
கைபேசியை ஊடுருவக் கூடிய மென்பொருள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக அவ்வாடவரை அவர்கள கடத்தியதாக கூறப்படுகிறது.
அடையாளம் தெரியாத நபர்களால் டோயோட்டா வெல்ஃபையர் வாகனத்தில் கடத்தப்பட்ட 31 வயது பாலஸ்தீன ஆடவரை கடத்தப்பட்ட ஒரு தினத்திற்கு பின்னர் போலீசார் பத்திரமாக மீட்டதாக ஊடகங்கள் கடந்த 5ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து கோல லங்காட், அம்பாங், பெரனாங் மற்றும் மலாக்காவில் அதிரடிச் சோதனை மேற்கொண்ட போலீசார் 18 பேரை கைது செய்தனர்.