ஷா ஆலம், அக் 25- தீபாவளியை முன்னிட்டு பெர்மாத்தாங் தொகுதியில் உள்ள வசதி குறைந்த 30 குடும்பங்களுக்கு 100 வெள்ளி ரொக்கமும் அத்தியாவசியப் பொருள்களும் வழங்கப்பட்டன.
சிலாங்கூர் மகளிர் சமூக நல அமைப்பான பெக்காவானிஸ் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட இந்த உதவி தீபாவளியைக் கொண்டாடுவதில் அக்குடும்பங்கள் எதிர்நோக்கும் நிதிச்சுமையை ஓரளவு குறைக்க உதவும் எனத் தாங்கள் நம்புவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடின் கூறினார்.
இம்மாதம் 14ஆம் தேதி தாமான் திராம் செத்தியாவைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கும் 23ஆம் தேதி மேலும் 16 குடும்பங்களுக்கும் இந்த உதவி வழங்கப்பட்டது என அவர் சிலாங்கூரிகினியிடம் தெரிவித்தார்.
மொத்தம் 30 குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெற்றன. தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட இந்த உதவி அவர்களுக்கு துணை புரியும் என நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
அனைத்து பெருநாள்களின் போதும் இத்தகைய உதவிகளை வழங்கி வரும் பெக்காவானிஸ் அமைப்பின் தலைவர் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமதுவுக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் சொன்னார்.
தீபாவளியை முன்னிட்டு மாநிலத்திலுள்ள குறைந்த வருமானம் பெறும் 1,400 குடும்பங்களுக்கு பெக்காவானிஸ் உதவிப் பொருள்களை வழங்கியது.