ஷா ஆலம், அக் 26- அகில மலேசிய அரசு செயலக விளையாட்டுப் போட்டி (சுக்செம்) போட்டியின் எட்டாவது தொடர் நேற்று இங்கு தொடங்கியது. இப்போட்டியில் 12 அணிகளைச் சேர்ந்த 2,000 விளையாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இந் ஐந்து நாள் போட்டியில் கால்பந்து, பூப்பந்து, செப்பாக் தக்ராவ், வலைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட பத்து விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினர்.
இந்த சுக்செம் போட்டியை நடத்துவதன் நோக்கம் விளையாட்டிற்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதல்ல. மாறாக, அணுக்கமான தொடர்பையும் அதன் மூலம் அரசாங்க சேவையை மேம்படுத்துவதற்குரிய வாய்ப்பையும் ஏற்படுத்துவதாகும் என அவர் குறிப்பிட்டார்.
குழுவை நிர்வாக நிர்வகிப்பதற்குரிய ஆற்றலை வெளிப்படுத்தவும் அரசு செயலகத்தில் பணியாற்றுவோர் மத்தியில் காணப்படும் விளையாட்டுத் திறனை வெளிக்கொணரவும் இந்த போட்டி வழி வகுக்கும் என அவர் சொன்னார்.
இத்தகைய விளையாட்டுப் போட்டிகளின் வாயிலாக மனிதாபிமானத்தின் பொருளை சமூகம் உணர்ந்து கொள்ளவும் ஒருவரை ஒருவர் மதித்து நடக்கவும் வாய்ப்பினை ஏற்படுத்தும் என்றார் அவர்.
இந்த போட்டி விளையாட்டை சிலாங்கூர் முதன் முறையாக ஏற்று நடத்துகிறது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இப்போட்டி கடந்த ஈராண்டுகளாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.