தந்தையுடன் மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் ஆற்றில் மூழ்கி மரணம்- ரவாங்கில் சம்பவம்

ஷா ஆலம், அக் 26- தந்தை மற்றும் தம்பியுடன் நேற்றிரவு ரவாங் சுங்கை கோங் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற பதின்ம வயது ஆடவர் நீரில் மூழ்கி மரணமடைந்ததாக அஞ்சப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் இரவு மணி 10.28 அளவில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து மீட்புக் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு  விரைந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமீஸ் கூறினார்.

மீன் பிடித்தப் பின்னர் ஆற்றைக் கடக்க முயன்ற போது அந்த குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் நீரோட்டத்தில் சிக்கிக் கொண்டதாக அவர் சொன்னார்.

அவர்களில் இருவரை அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர். எனினும், 16 வயதுடைய நபர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார் என்று அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் சே அஸ்மி சே ஹூசேன் (வயது 45) மற்றும் முகமது இக்பார் சே அஸ்மி (வயது 15) ஆகியோர் உயிர்த்தப்பிய வேளையில் முகமது அலிப் ஃபாமி அப்துல்லா (வயது 16) காணாமல் போனதாக அவர் குறிப்பிட்டார்.

காணாமல் போன இளைஞரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :