ஷா ஆலம், நவ 25- யாவாஸ் எனப்படும் யாயாசான் அனாக் வாரிசான் வாயிலாக ஆஸோ பிந்தார் எனும் குழந்தை பராமரிப்பு உதவித் திட்டத்தை தொடர சிலாங்கூர் அரச ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு நான்கு வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகளின் பராமரிப்பு செலவினமாக தலா 100 வெள்ளி வழங்கப்படும்.
இந்த ஆஸோ பிந்தார் குழந்தை பராமரிப்பு திட்டத்தைத் தொடர மாநில அரசு 600,000 வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மேலும் பெரும் தொற்று பரவலுக்குப் பிறகு பி40 தரப்பினர் எதிர்நோக்கும் பொருளாதார சிரமத்தைக் கருத்தில் கொண்டு மழலையர் மற்றும் பாலர் பள்ளிகளில் சேரும் நான்கு வயதுக்கும் குறைவான பிள்ளைகளுக்கு நுழைவுக் கட்டண உதவித் தொகையாக ஒரு முறை மட்டும் 100 வெள்ளி வழங்கப்படும் என அவர் சொன்னார்.
இந்த திட்டத்திற்கு 500,000 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மாநில சட்டமன்றத்தில் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது குறிப்பிட்டார்.