NATIONAL

தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் அதிரடி- வீடு புகுந்து திருடும் கும்பல் முறியடிப்பு

கிள்ளான், டிச 14- வீடு புகுந்து கொள்ளையடிப்பது மற்றும் மோட்டார்
சைக்கிள்களைத் திருடுவதில் கைதேர்ந்த கும்பலைத் தென் கிள்ளான்
மாவட்டப் போலீசார் கூண்டோடு கைது செய்துள்ளனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை
மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் அக்கும்பலைச் சேர்ந்த
அறுவரும் கைது செய்யப்பட்டதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ்
தலைவர் ஏசிபி சா ஹோங் ஃபூங் கூறினார்.

தென் கிள்ளான் மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு பின்னிரவு 2.37
மணியளவில் மேற்கொண்ட இச்சோதனையில் 20 முதல் 30 வயது
வரையிலான அந்த அறுவரும் கைது செய்யப்பட்டனர் என்று அவர்
தெரிவித்தார்.

இந்த கைது நடவடிக்கையின் எதிரொலியாக, திருடப்பட்டதாக நம்பப்படும்
இரு மோட்டார் சைக்கிள்களும் கைற்றப்பட்டன. இக்கும்பலுடன்
தொடர்புடைய இதர நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் நாங்கள்
ஈடுபட்டு வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, கும்பலால் கொள்ளையடிக்கப்பட்ட இதர பொருள்கள் மற்றும்
மோட்டார் சைக்கிள்களை கண்டு பிடிப்பதற்கு ஏதுவாக பிடிப்பட்ட
நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்
சொன்னார்.

பூலாவ் இண்டா, கம்போங் நெனாசிலுள்ள தமது வீட்டில் நிகழ்ந்த
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் பண்டமாரான்
போலீஸ் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகார் செய்ததைத்
தொடர்ந்து அந்த சந்தேக பேர்வழிகள் அனைவரும் சுற்றி
வளைக்கப்பட்டனர் என்றார் அவர்.

அவ்வீட்டிலிருந்து சுமார் 10,000 வெள்ளி மதிப்புள்ள ஆறு மோட்டார்
சைக்கிள்கள், சைக்கிள், தையல் இயந்திரம் மற்றும் பல்வேறு
பொருள்களை அக்கும்பல் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றது.


Pengarang :