ECONOMYSELANGOR

இவ்வாண்டிற்கான இறுதி மலிவு விற்பனை நாளை மூன்று தொகுதிகளில் நடைபெறுகிறது

ஷா ஆலம், டிச 23- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்
(பி.கே.பி.எஸ்.) இவ்வாண்டிற்கான இறுதி அத்தியாவசியப் பொருள்களின் மலிவு
விற்பனை நாளை மூன்று தொகுதிகளில் நடைபெறவுள்ளது.

ஜெலாஜா ஏசான் ராக்யாட் எனும் அந்த மலிவு விற்பனை கம்போங்
புடிமான் அல்-ஃபாலா பள்ளிவாசல் (மேரு தொகுதி), ஜாலான் பெலங்கி 11
(ரவாங் தொகுதி), தாமான் செந்தோசா தொகுதி சேவை மைய வளாகம்
ஆகிய இடங்களில் நடைபெறும்.

வழக்கம் போல் இந்த விற்பனையில் 500 கோழிகள் தலா 10.00 வெள்ளி
விலையிலும் 300 தட்டு பி கிரேட் முட்டை தலா 10.00 வெள்ளி
விலையிலும் 300 பாக்கெட் இறைச்சி தலா 10.00 வெள்ளி விலையிலும்
விற்கப்படும்.

இவை தவிர 300 பாக்கெட் கெம்போங் மீன் (வெ.6.00), 300 பேக் 5 கிலோ
அரிசி (வெ.10.00), 5 கிலோ எடையுள்ள 150 போத்தல் சமையல் எண்ணெய்
(வெ.25.00) ஆகியவையும் இங்கு விற்பனைக்கு வைக்கப்படும்.

மேலும் பி.கே.பி.எஸ் கழகத்தின் சொந்த வெளியீடுகளான கோதுமை, சீனி,
மிளகாய் சாந்து, தக்காளி சாந்து, கிச்சாப், சார்டின், பிஸ்கட், மீ, உள்ளிட்ட
உலர்ந்து உணவுப் பொருள்களும் மலிவான விலையில் இங்கு கிடைக்கும்.

கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கிய இந்த மலிவு விற்பனை 56
தொகுதிகளிலும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மலிவு விற்பனைக்குக்
கிடைத்து வரும் ஆதரவு காரணமாக அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை
இத்திட்டம் தொடரப்படுகிறது.


Pengarang :