ஷா ஆலம், டிச 23: மாதவிடாய் பிரச்சனையைச் சமாளிக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்துவதுடன், சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாகச் சிலாங்கூர் திகழ்கிறது.
டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, RM200,000 நிதி ஒதுக்கீட்டில், குறைந்த வருமானம் கொண்ட தரப்பினர் (B40), மாணவர்கள் மற்றும் நகர்ப்புறத்தில் ஏழ்மையில் உள்ளவர்கள் மீது கவனம் செலுத்தப்படும் எனக் கூறினார்.
2018 ஆம் ஆண்டின் உலக வங்கியின் ஆய்வில் உலகெங்கிலும் உள்ள 500 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மாதவிடாய் காலத்தில் அடிப்படைத் தேவைகளைப் பெற முடியாது எனக் காட்டியது. அதன் அடிப்படையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார்.
“மாதவிடாய் பிரச்சனையை சமாளிக்க இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்குவதில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு கல்வி மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்துகிறது.
“மாநில அரசும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தும்,“ என முகநூலில் குறிப்பிட்டார்.
மாதவிடாய் பிரச்சனை என்பது பணப் பற்றாக்குறை மற்றும் சானிட்டரி நாப்கின்களை வாங்க முடியாமல் இருப்பது மட்டுமல்ல தண்ணீர் விநியோகம் மற்றும் முறையான அகற்றல் முறையில் உள்ள தடைகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.