SELANGOR

பல்வேறு குற்றங்களுக்காகக் காஜாங்கில் ஏழு உணவகங்களுக்குக் குற்றப்பதிவு

ஷா ஆலம், டிச 26- வர்த்தக உரிம விதி மீறல் மற்றும் உணவு
கையாளுதல் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காகக் காஜாங்
வட்டாரத்திலுள்ள ஏழு உணவகங்களுக்கு ஒன்பது குற்றப்பதிவுகள்
வெளியிடப்பட்டன.

தாமான் தாமின் ஜெயா மற்றும் பண்டார் மக்கோத்தா செராசில் உள்ள
அந்த உணவகங்களுக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டதாக காஜாங் நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக்
பதிவில் கூறியது.

அந்த சோதனையின் போது டைபாய்டு காய்ச்சல் உள்ளிட்ட
நோய்களுக்கான தடுப்பூசியை ஊழியர்கள் பெற்றிராதது தொடர்பில் ஐந்து
குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதாக அது மேலும் தெரிவித்தது.

எண்ணெய்க் கழிவுகள் கால்வாயில் கலப்பதை தடுப்பதற்கான
வடிதட்டுகளை பொருத்தாத காரணத்திற்காக மூன்று குற்றப்பதிவுகளும்
ஊழியர்கள் ஏப்ரன் மற்றும் தொப்பி அணியாக குற்றத்திற்காக ஒரு
குற்றப்பதிவும் வழங்கப்பட்டன.

காஜாங் நகராண்மை கழகத்தின் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்
துறையின் ஆறு பிரிவுகள் இந்த சோதனை நடவடிக்கையில் பங்கு
கொண்டன.


Pengarang :