பாடாங் புசார், ஜன. 13: ஃபெல்க்ரா லுபுக் சிரேயில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர் நேற்று தீ விபத்தில் உயிரிழந்தார்.
மதியம் 1.20 மணி அளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், அந்த மூதாட்டி தனது வீட்டிற்குள் சிக்கிக் கொண்டார் எனப் பாடாங் புசார் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஷோக்ரி அப்துல்லா கூறினார்
“தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உறுப்பினர்கள் குழு மதியம் 1.35 மணியளவில் தீயை வெற்றிகரமாக அணைத்த பிறகு, ஓர் அறையில் 61 வயதான அம் மூதாட்டியின் சடலத்தைக் கண்டனர்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த மூதாட்டி கிட்டத்தட்ட 90 சதவிகிதம் தீ காயமடைந்ததாகவும், அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கெடா, அலோர்ஸ்டார், சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப் பட்டுள்ளதாகவும், சம்பவத்திற்கு காரணம் இன்னும் தீயணைப்புத் துறையின் விசாரணையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.