ஷா ஆலம், ஜன 19- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 447வது கிலோ
மீட்டரில் நேற்று முன்தினம் பயணப் பெட்டி ஒன்றில் ஆறு துண்டுகளாக
வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டச் சடலம் இன்னும்
அடையாளம் காணப்படவில்லை.
சடலம் கண்டு பிடிக்கப்படுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்னர்
சம்பந்தப்பட்ட நபர் உயிரிழந்திருக்கலாம் என்பதை சவப்பரிசோதனையின்
முடிவுகள் காட்டுவதாக சிலாங்கூர் மாநில இடைக்கால போலீஸ்
தலைவர் டத்தோ எஸ். சசிகலா தேவி கூறினார்.
தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது தெரிந்தவர்கள் காணாமல் போனது
தொடர்பில் யாரிடமும் இருந்தும் இதுவரை தாங்கள் புகாரைப்
பெறவில்லை என்று அவர் தெரிவித்தார்.
அந்த சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பி.சி.ஜி. தடுப்பூசி
செலுத்தியதற்கான அடையாளம் காணப்படவில்லை. அதன் அடிப்படையில்
கொலையுண்டவர் அந்நிய நாட்டினராக இருப்பதற்கு சாத்தியம் அதிகம்
உள்ளது என அவர் சொன்னார்.
இறந்தவரை அடையாளம் காண்பதற்காக தாங்கள் அனைத்துலக
போலீசாரின் (இண்டர்போல்) உதவியை நாடும் சாத்தியம் உள்ளதாகவும்
அவர் குறிப்பிட்டார்.
இறந்த நபர் மலேசியர் அல்லது முஸ்லீம் அல்லாதவர் என்பதோடு
கனமான மற்றும் கூர்மையான பொருளால் தாக்கப்பட்டதால் அவர்
உயிரிழந்துள்ளார் என்பதை சவப்பரிசோதனையின் முடிவுகள் காட்டுவதாக
ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.