சுங்கை பூலோ, ஜன 19- பள்ளி மாணவர்களுக்கு ஆரம்ப உதவித் தொகையை பகிர்ந்தளிப்பதற்காக கடந்த திங்கட்கிழமை பள்ளி செமிஞ்சேயிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட பணம் களவு போனது தொடர்பில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர் உள்பட மூவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
பள்ளி ஆசிரியர் மற்றும் சம்பவத்தின் போது தலைமையாசிரியர் பானம் வாங்கியதாக கூறப்படும் கடையின் ஊழியர் ஆகியோரே விசாரணைக்குட்படுத்தப்பட்ட மற்ற இருவராவர் என்று சிலாங்கூர் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ எஸ். சசிகலா தேவி கூறினார்.
இம்மூவர் தவிர்த்து அந்த தலைமையாசிரியர் பணத்தை மீட்ட வங்கியின் பணியாளர்களும் விசாரணைக்கு அழைக்கப் படுவர். இந்த களவுச் சம்பவத்தில் உள் நபர்களின் தொடர்பு இருப்பதற்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை. எனினும், விசாரணையில் அதற்கான எந்த முகாந்திரமும் தென்படவில்லை என்றார் அவர்.
சம்பவ இடத்தில் உள்ள இரகசிய கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாகவும் சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்று சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
கடந்த 16ஆம் தேதி பிற்பகல் 12.17 மணியளவில் கம்போங் பாரு செமினியிலுள்ள வங்கியிலிருந்து மீட்ட 109,000 வெள்ளித் தொகையை அந்த தலைமையாசிரியர் தனது காரில் வைத்து விட்டு அருகிலுள்ள உணவகத்திற்கு பானம் வாங்கச் சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து அப்பணத்தைக் கொள்ளையிட்டுத் தப்பினர்.