NATIONAL

கார்-மோட்டார் சைக்கிள் விபத்தில் போக்குவரத்து போலீஸ்காரர் காயம்

ஷா ஆலம், ஜன 26-   இங்குள்ள ஷா ஆலம்-கிள்ளான்  கூட்டரசு நெடுஞ்சாலையின் 
8.9 கிலோ மீட்டரில் நேற்று நிகழ்ந்த   மோட்டார் சைக்கிள் மற்றும் புரோட்டோன் 
எக்ஸ்70 வாகனம் சம்பந்தப்பட்ட விபத்தில் போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் 
காயமடைந்தார்.

நேற்று மதியம் சுமார் 12.45 மணியளவில் ஓப்  செலாமாட்  சாலை பாதுகாப்புப்  
பணியில் ஈடுபட்டிருந்த சார்ஜெண்ட் அப்துல் ஜலீல் முகமது சைட் (வயது 35) என்ற 
அந்த போலீஸ்காரர் சாலையின் இடது தடத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது  இந்த விபத்து ஏற்பட்டதாக ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது 
இக்பால் இப்ராஹிம் கூறினார்.

அதே தடத்தில் சென்று கொண்டிருந்த  புரோட்டோன் எக்ஸ்70 கார் பெட்ரோல் 
நிலையத்திற்குச் செல்வதற்காக திடீரென இடது புறம் நுழைந்தால் தவிர்க்க 
நேரமில்லாமல் அந்த பல்வகை பயன்பாட்டு வாகனம்  மீது போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் மோதியது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சாலையில் விழுந்ததில் முகம் மற்றும் கைகளில் காயமடைந்த அப்துல் ஜலீல் சிகிச்சைக்காக ஷா ஆலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

42 வயதான புரோட்டோன் எக்ஸ் 70 ஓட்டுநர் காயமடையவில்லை என்றும் அவரது கார் இடது கதவில் மட்டுமே சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43 இன் கீழ் விசாரணை நடத்தப்படுவதாக அவர் மேலும் சொன்னார்.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்தவர்கள் ஷா ஆலம் மாவட்ட போக்குவரத்து 
புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவின் புலனாய்வு அதிகாரி, இன்ஸ்பெக்டர் முகமது ஹனிஃப் சுக்ரியை 014-8066 744 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு 
உதவுமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.

Pengarang :