கோலாலம்பூர், பிப் 13- கோம்பாக், 12வது மைல் சுங்கை பீசாங் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அதிவேக நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட வேளையில் மற்றொரு ஆடவர் காப்பாற்றப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் தமது தரப்பு நேற்று மாலை 6.57 மணியளவில் தகவலைப் பெற்றதாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் டத்தோ நோராஸாம் காமிஸ் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செலாயாங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு இரவு 7.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.
இருபது வயது மதிக்கத்தக்க அவ்விரு இளைஞர்களும் அந்த ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது கடும் மழை காரணமாக ஆற்றில் நீரோட்டம் திடீரென அதிகரித்து அதில் அவ்விருவரும் அடித்துச் செல்லப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த சம்பவத்தில் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஆடவரின் சடலத்தைத் தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.