NATIONAL

நீரில் மூழ்கிய சிறுவன் மரணம்

கோத்தா பாரு, மார்ச் 6: பந்தாய் கெமாயன், பச்சோக்கில் நேற்று தவறி விழுந்த சகோதரனைக் காப்பாற்ற முயன்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்த அஹ்மத் ஃபத்லுல்லா முகமட் (12), இன்று மதியம் 1.40 மணியளவில், தவறி விழுந்ததாக அறிவிக்கப்பட்ட இடத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பந்தாய் செனோக் என்ற இடத்தில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப் பட்டதாகப் பாச்சோக் மாவட்டக் காவல்துறைத் தலைவர் முகமது இஸ்மாயில் ஜமாலுடின் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவரின் உடல் ராஜா பெரெம்புவான் ஜைனாப் II மருத்துவமனைக்குப் (HRPZ II) பிரேதப் பரிசோதனை மற்றும் மேல் நடவடிக்கைக்காகக் கொண்டு செல்லப்பட்டது,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்), மலேசியக் கடல்சார் அமலாக்க நிறுவனம் (ஏபிஎம்எம்) மற்றும் குடிமைத் தற்காப்புப் படை (ஏபிஎம்) ஆகியவற்றின் உறுப்பினர்களிடமிருந்தும் தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிக்கான உதவி பெற்றதாக அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :