ஷா ஆலம், மார்ச் 18- சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது மீந்துப் போன 177 கிலோ உணவுகள் சமூக நல இல்லங்களுக்கு வழங்கப்பட்டன.
வாட் அ வேஸ்ட் எனும் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டதாக சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸீ கூறினார்.
உலக வெப்பமயம் ஆவதற்கு காரணமாக விளங்கும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் மாநில சட்டமன்றத்தில் சேகரிக்கப்பட்ட மீந்து போன உணவைக் கணக்கிட்டால் அதன் மூலம் 442 கிலோ கார்பன் உருவாகும் சாத்தியம் உள்ளது. கார்பன் வெளியேற்றம் அதிகரித்தால் பூமியில் வெப்பமும் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
உலக வெப்பமயம் காரணமாக வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன. நாம் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கையின் மூலம் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும் என்றார் அவர்.
கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் வாயிலாக இது வரை சுமார் 170 கிலோ உணவுகளை சேகரித்து சமூக நல இல்லங்களுக்கு வழங்கியுள்ளோம். அடுத்து வரும் சட்டமன்றக் கூட்டங்களின் போதும் இந்த நடைமுறை தொடர்ந்து அமல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.