கோலாலம்பூர், மே 10: சமூக ஊடகங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இனப்பிரச்சனையை தூண்டும் மற்றும் தேசத் துரோகம் சம்பந்தப்பட்ட இரண்டு அறிக்கைகளைப் பதிவேற்றியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை அரச மலேசிய காவல்துறை (PDRM) கைது செய்துள்ளது.
ட்விட்டர் கணக்கில் @hezryhaizad என்ற பெயரைப் பயன் படுத்திய (33) வயது நபர், பேராக், பாகான் செராய் எனும் இடத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். அந்நபர் இன்று முதல் வியாழன் வரை மூன்று நாட்களுக்குக் காவலில் வைக்கப் பட்டுள்ளார் என்று பிடிஆர்எம் செயலாளர் டத்தோ நூர்சியா சாடுடின் கூறினார்.
கைது செய்யப் பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபரிடம் இருந்து கைப்பேசி மற்றும் சிம்கார்டையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
நூர்சியாவின் கூற்றுப்படி, இந்த வழக்கை தேசத்துரோகச் சட்டம் 1948 இன் பிரிவு 4(1) மற்றும் தண்டனைச் சட்டம் பிரிவு 505 (c) இன் கீழ் வகைப்படுத்தப்பட்டு புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை விசாரித்து வருகிறது.
தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998இன் பிரிவு 233இன் கீழ் அந்த நபர் விசாரிக்கப்பட்டார். இது நெட்வொர்க் வசதிகள் அல்லது நெட்வொர்க் சேவைகளை முறையற்ற முறையில் பயன்படுத்தும் சட்டப் பிரிவாகும்.
கோபத்தை வரவழைக்கும் மற்றும் மதம், இனம், அரசர் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் சமூக ஊடகங்களை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்று பிடிஆர்எம் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது. இது நாட்டு மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும்,” என்று அவர் கூறினார்.
ஒழுங்கு மற்றும் சமூக நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தற்போதுள்ள சட்ட விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
– பெர்னாமா