NATIONAL

லோரியுடன் கார் மோதல்- மூன்று உடன்பிறப்புகள் உள்பட நால்வர் பரிதாபமாக மரணம்

ஈப்போ, மே 16- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 310.2வது கிலோ
மீட்டரில் இன்று அதிகாலை நிகழ்ந்த மண் லோரி மற்றும் புரோட்டோன்
சாகா கார் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று
உடன்பிறப்புகளும் ஒரு பெண்மணியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புரோட்டோன் காரில் பயணம் செய்த அகமது உவாய்ஸ் குர்னி நசாருடின்
(வயது 5), நுர் அமினா நசாருடின் (வயது 8), முகமது அஸாய்ப் நசாருடின்
(வயது 23) மற்றும் ஒரு பெண்மணியான அஸ்ரியானி லத்திப் (வயது 45)
ஆகியோரே இவ்விபத்தில் பலியானவர்களாவர்.

காரிலிருந்த மற்றொரு சிறுவனான பாவாஷ் நசாருடின் (வயது 7)
கடுமையான காயங்களுக்குள்ளான வேளையில் லோரி ஓட்டுநர்
காயமின்றி உயிர்த் தப்பினார்.

இந்த விபத்து தொடர்பில் விடியற்காலை 2.00 மணியளவில் தாங்கள்
அவசர அழைப்பைப் பெற்றதாகப் பேராக் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் முகமது ஏசான் முகமது
ஜெய்ன் கூறினார்.

அந்த புரோட்டோன் சாகா கார் லோரியின் பின்புறம் மோதியதன்
விளைவாக அதன் இயந்திரப் பகுதியில் தீப்பிடித்ததாக அவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் அக்காரிலிருந்த நால்வரும் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்ததை சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாகக்
கூறிய அவர், காயங்களுக்குள்ளான சிறுவன் சிகிச்சைக்காகக் கம்பார்
மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டுச் செல்லப்பட்டதக்ச் சொன்னார்.
இவ்விபத்தில் இறந்தவர்களின் உடலில் தீக்காயங்கள் காணப்பட்டதாகவும்
அவர் கூறினார்.


Pengarang :