கோம்பாக், மே 15: தற்போது நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுவதை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) கண்காணிக்கும்.
இதுவரை கடல் உணவுகளின் விலை கட்டுக்குள் இருப்பதாகவும், இன்னும் நெருக்கடி குறித்து புகார்கள் ஏதுமில்லை என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின் அயூப் கூறினார்.
“மீன்கள் விநியோகம் இன்னும் போதுமானதாக உள்ளது. உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் அமலாக்க அதிகாரிகள் மற்றும் வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் (MAFS) தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறது.
முன்னதாக, விநியோக அளவில் மீன்கள் குறைவாக இருப்பதாகக் கூறியதால் ஒரு சில வியாபாரிகள் மீன்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
மீன் விலை குறித்த புகார்கள் குறித்து ஒட்டு மொத்த வியாபாரிகள், விநியோகிப்பாளர் களிடம் இருந்து மட்டுமல்லாமல் தனிப்பட்ட புகார்கள் வந்தாலும் அது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க அந்த அமைச்சு தயாராக இருப்பதாக அமைச்சர் கூறினார்.