NATIONAL

முதலீடுகளைக் கவர்வதில் சிறப்பான போக்குவரத்து முறை பேருதவி- ஷா ஆலம் டத்தோ பண்டார்

ஷா ஆலம், ஜூன் 7- உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தேர்வுக்குரிய இடமாக அல்லது வர்த்தகத்தை விரிவாக்குவதற்குரிய மையமாக ஷா ஆலம் விளங்குவதற்கு இம்மாநகரில் காணப்படும் பல்வகை போக்குவரத்து ஒருங்கமைப்பு முக்கிய காரணமாக
விளங்குகிறது.

போக்குவரத்து முறை சிறப்பாக இருக்கும் காரணத்தால் தங்கள் வர்த்தக
நடவடிக்கைகளைச் சீராக மேற்கொள்ளும் நோக்கில் அண்மைய
ஆண்டுகளாக அதிகமானோர் இங்கு முதலீடு செய்து வருகின்றனர் என்று
ஷா ஆலம் டத்தோ பண்டார் டாக்டர் நோர் புவாட் அப்துல் ஹமிட்
கூறினார்.

சீரான போக்குவரத்து முறை ஈர்ப்புக்குரிய முக்கிய அம்சமாக
விளங்குகிறது. ஷா ஆலம் மாநகரைச் சுற்றி பல போக்குவரத்து வசதிகள்
உள்ளன. விரைவில் தொடங்கவிருக்கும் எல்.ஆர்.டி.3 திட்டம் மூலம்
மேலும் அதிகமான முதலீடுகளைப் பெறுவதற்குரிய வாய்ப்பு உள்ளது என்ற
அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் ஷா ஆலம்
அமைந்திருப்பதும் இங்கு அதிக முதலீடுகள் வருவதற்குக் காரணமாக
விளங்குகின்றன. கிள்ளான் துறைமுகம் மற்றும் சிப்பாங்கிலுள்ள
அனைத்துலக விமான நிலையம் ஆகியவற்றுக்கு அருகில் இம்மாநகர்
அமைந்துள்ளது என்று சிலாங்கூர்கினிக்கு அளித்த பேட்டியில் அவர்
சொன்னார்.

இன்வெஸ்ட் சிலாங்கூர் ஏற்பாட்டில் நேற்றிரவு இங்கு நடைபெற்ற 2019-2022
சிறந்த முதலீட்டாளர் விருதளிப்பு நிகழ்வில் சிறந்த முதலீட்டு
மையத்திற்கான பிரிவில் ஷா ஆலம் மாநகர் மன்றம் விருது பெற்றது.

ஷா ஆலம் மாநகர் மன்றம் தவிர்த்து கிள்ளான் நகராண்மைக் கழகம்
மற்றும் கோல லங்காட் நகராண்மைக் கழகம் ஆகியவையும் இந்த
விருதைப் பெற்றன. மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.


Pengarang :