NATIONAL

காரை ஓட்டிய 11 வயது சிறுவன் தடுத்து வைப்பு- கடமை தவறிய தந்தையும் கைது

ஷா ஆலம், ஜூன் 12- தந்தைக்குச் சொந்தமான காரை தனியொருவனாக
ஓட்டிச் சென்ற 11 வயதுச் சிறுவனைப் போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் பந்திங்-பண்டமாரான் சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை
நிகழ்ந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் அந்த சிறுவனின் தந்தையான 49 வயது நபரும்
பண்டமாரானில் உள்ள அவரது வீட்டில் நேற்று பிற்பகல் 1.25
மணியளவில் கைது செய்யப்பட்டதாகத் தென் கிள்ளான் மாவட்டப் போலீஸ்
தலைவர் ஏசிபி சா ஹூங் பூங் கூறினார்.

இந்த சம்பவத்தைச் சித்தரிக்கும் 1.15 விநாடி காணொளி ஒன்று தென்
கிள்ளான் மாவட்டப் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்க பிரிவின்
கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதாக அவர் சொன்னார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் நிகழ்ந்ததாக
நம்பப்படும் இந்த சம்பவத்தில் சில்வர் நிற புரோட்டோன் சாகா காரை
சிறுவன் ஒருவன் ஓட்டிச் செல்வதைச் சித்தரிக்கும் காட்சி அந்த
காணொளியில் பதிவாகியிருந்தது என அவர் தெரிவித்தார்.

இந்த தகவலின் அடிப்படையில் தென் கிள்ளான் மாவட்டப் போலீசார்
பண்டமாரானிலுள்ள வீடொன்றில் சோதனை மேற்கொண்டு அந்த காரின்
உரிமையாளரையும் காரை ஓட்டிய சிறுவனையும் கைது செய்தனர் என்று
அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கைதான இருவரும் விசாரணைக்காகத் தென் கிள்ளான் மாவட்டப் போலீஸ்
தலைமையகத்திற்குக் கொண்டு வரப்பட்ட வேளையில் சம்பந்தப்பட்ட
காரும் பறிமுதல் செய்யப்பட்டது என்றார் அவர்.


Pengarang :