SELANGOR

மாநிலத் தேர்தல்- கோத்தா அங்கிரிக், பத்து தீகா தொகுதிகளை பி.கே.ஆர். தக்கவைத்துக் கொள்ளும்- ரோட்சியா நம்பிக்கை

ஷா ஆலம், ஜூன் 20- விரைவில் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநிலத்
தேர்தலில் ஷா ஆலம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கோத்தா
அங்கிரிக் மற்றும் பத்து தீகா ஆகிய இரு சட்டமன்றங்களையும் பி.கே.ஆர்.
கட்சி தக்க வைத்துக் கொள்ளும் என்று ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

எதிர்வரும் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடுவது தொடர்பில்
முடிவெடுக்கும் பொறுப்பை கட்சித் தலைமைத்துவத்திடமே விட்டு
விடுவதாக பத்து தீகா சட்டமன்ற உறுப்பினரும் அம்பாங் நாடாளுமன்ற
உறுப்பினருமான அவர் சொன்னார்.

மாநிலத் தேர்தலில் பத்து தீகா தொகுதியில் தொடர்ந்து
போட்டியிடுவீர்களா? அல்லது புக்கிட் அந்தாராங்சா, லெம்பா ஜெயா ஆகிய
தொகுதிகளில் ஒன்றில் களம் காண்பீர்களா? என நிருபர்கள்
வினவியபோது அவர் இவ்வாறு பதிலளித்ததாக தி ஸ்டார் நாளேடு செய்தி
வெளியிட்டுள்ளது.

எனது தொகுதி தற்காத்துக் கொள்ள களம் இறங்கும்படி கேட்டுக்
கொள்ளப்பட்டால் நான் அவ்வாறு செய்யத் தயாராக இருக்கிறேன் என
வீடமைப்பு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினருமான ரோட்சியா தெரிவித்தார்.

தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் தாங்கள்
பிரதிநிதிக்கும் தொகுதிகளைத் தக்க வைத்துக் கொள்வது என்று சிலாங்கூர்
மாநில அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மத்தியில் இணக்கம்
காணப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :