NATIONAL

பெஞ்சானா கெர்ஜாயா 2.0 திட்டத்தில் மோசடி- நிறுவன இயக்குநருக்கு வெ.50,000 அபராதம்

கோலாலம்பூர், ஜூன் 22- பெஞ்சானா கெர்ஜாயா 2.0 திட்டத்தின் கீழ் 31,200
வெள்ளி ஊக்கத் தொகையைப் பெறுவதற்கு சொக்சோ எனப்படும் சமூக
பாதுகாப்பு நிறுவனத்திடம் போலியான ஆவணங்களைச் சமர்பித்த
குற்றத்திற்காக தொழிலாளர் தருவிப்பு நிறுவனம் ஒன்றின் இயக்குநருக்கு
இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் 50,000 வெள்ளி அபராதம் விதித்தது.

தனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தேர்வுக் குற்றச்சாட்டை எஸ்.ராதா
(வயது 54) என்ற அந்த இயக்குநர் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து இந்த
தீர்ப்பை வழங்கிய நீதிபதி சுஸானா ஹூசேன், அபராதத் தொகையைச்
செலுத்தத் தவறினால் இரண்டு மாத சிறைத்தண்டனை அனுபவிக்கவும்
உத்தரவிட்டார்.

ஸ்டார் ஸ்கில் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் உரிமையாளர் என்ற
முறையில் ராதா தனது நிறுவனத்தின் 12 தொழிலாளர்களுக்கு 31,200
வெள்ளி ஊக்கத் தொகையைப் பெறுவதற்காக போலி ஆவணங்களை
சமர்பித்ததாக அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில கூறப்பட்டிருந்தது.

கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதவாக்கில் தலைநகர், ஜாலான் துன்
ரசாக்கில் உள்ள விஸ்மா பெர்கேசோவில் இக்குற்றத்தைப் புரிந்ததாக
அவர் குற்றச்சாட்டை எதிர் நோக்கியிருந்தார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஈராண்டு வரையிலான
சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க
செய்யும் தண்டனைச் சட்டத்தின் 465வது பிரிவு மற்றும் தண்டனைச்
சட்டத்தின் 471வது பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.


Pengarang :