NATIONAL

காப்புறுதி பணத்திற்காக மனைவியிடமே கொள்ளையிடத் திட்டம் வகுத்த கணவர் கைது

குவாந்தான், ஜூலை 20- தன் மனைவியிடமே கொள்ளையிடும்
திட்டத்திற்கு மூளையாகச் செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆடவர்
ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண்மணி ஒருவரிடம் கொள்ளையிட்டது தொடர்பில் கைது செய்யப்பட்ட
மூன்று ஆடவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொள்ளை
நாடகம் அம்பலத்திற்கு வந்ததாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் ஜைஹான் முகமது கஹார் கூறினார்.

இந்த கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்டவர்
கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் 47 வயது கணவர்
என்பதும் காப்புறுதி இழப்பீட்டைக் கோருவதற்காக அவர் இந்த திட்டத்தை
அரங்கேற்றியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று
அவர் சொன்னார்.

கடந்த திங்கள்கிழமை மாலை 3.05 மணியளவில் காராக் தாமான்
ஹிஜாவில் உள்ள தனது வீட்டினுள் முகமூடி அணிந்த மூன்று நபர்கள்
பாராங் கத்தியுடன் நுழைந்ததாக 42 வயதான அப்பெண் போலீசில் புகார்
அளித்திருந்தார்.

தன்னை கத்தி முனையில் மடக்கிய அக்கும்பல் வீட்டைச் சூறையாடி
நகைகள், கார் உள்பட 16,000 வெள்ளி மதிப்புள்ள பொருள்களுடன்
தப்பியதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.


Pengarang :