ஷா ஆலம், ஜூலை 20- சிலாங்கூரில் மோசமான நிலையில் உள்ளது என அடையாளம் காணப்பட்ட 33 கிளினிக்குகளை சுகாதார அமைச்சு கட்டங் கட்டமாக தரம் உயர்த்தும்.
இவ்வாண்டில் நாடு முழுவதும் தரம் உயர்த்தப்பட வேண்டிய நிலையில் உள்ள 436 கிளினிக்குகளில் இவை ஒரு பகுதியாகும் என சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கூறினார்.
மூன்று கட்ட திட்டங்களின் வாயிலாக வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் 1,200 கிளினிக்குகள் மற்றும் மருத்துவ வசதிகளை தரம் உயர்த்த அமைச்சு இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
திட்டமிடப்பட்ட அனைத்து திட்டங்களும் குறிப்பிட்ட காலத்தில் முற்றுப் பெறுவதை உறுதி செய்ய விரும்புகிறோம்.
இத்திட்ட அமலாக்கத்தின் வழி பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் சுகாதார மையங்கள் சிறப்பான மற்றும் உகந்த சூழலை பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறினார்.
மருத்துவ வசதிகளை தரம் உயர்த்துவதற்கு தேவையான 11 கோடியே 10 லட்சம் நிதிக் கோரிக்கைக்கு நிதி அமைச்சு ஒப்புதல் அளித்து விட்டதோடு அவற்றில் சிலத் திட்டங்களும் தொடங்கப்பட்டு விட்டதாக டாக்டர் ஜலிஹா முன்னதாக கூறியிருந்தார்.