NATIONAL

மாநிலத் தேர்தலுக்குப் பின்னர் புதிய உள்நாட்டு வர்த்தக அமைச்சரின் பெயர் அறிவிக்கப்படும்- பிரதமர்

கோலாலம்பூர், ஜூலை 31- தற்போது ஆறு மாநிலங்களில் நடைபெற்று
வரும் தேர்தலுக்குப் பின்னர் புதிய உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச்
செலவின அமைச்சரின் பெயர் அறிவிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இம்மாதம் 23ஆம் தேதி காலமான டத்தோஸ்ரீ சலாவுடின் ஆயோப்பின்
இடத்தை நிரப்பக்கூடியவரை அடையாளம் காண தமக்கு கால அவகாசம்
தேவைப்படுவதாக அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள பியாஸா பெவிலியன் புக்கிட் ஜாலிலில் 2023ஆம்
ஆண்டிற்கான தேசிய பயனீட்டாளர் தினத்தை முடித்து வைக்கும்
நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார்.

தற்போதைக்கு உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின
அமைச்சின் பணிகளை கவனிக்கும் பொறுப்பு சபா, சரவா மற்றும் சிறப்பு
விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ அர்மிஸாம்
முகமது அலியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்
அமைச்சின் பணிகளைக் கவனிப்பதில் அர்மிஸாமிற்கு உதவும்படி
உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின துணையமைச்சர்
பவுஸியா சாலே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அந்த அமைச்சில் கூடுதல் கவனம் செலுத்தும்படி அர்மிஸாமை நான்
கேட்டுக் கொண்டுள்ளேன். அந்த அமைச்சின் பணிகளில் எந்த இடையூறும்
ஏற்பட்டதாக நான் கருதவில்லை என்றார் அவர்.

மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக உள்நாட்டு வர்த்தக
மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் சலாவுடின் (வயது 61) கடந்த
23ஆம் தேதி அலோஸ்டார் சுல்தானா பாஹ்யா மருத்துவமனையில்
காலமானார்.


Pengarang :